புதன், நவம்பர் 9

வடமதுரா என்னும் மதுரா

வடமதுரை என்னும் மதுரா

. "மதுரா நாம நகரி புண்யா பாபஹரி சுபா"
என்னும் புராண ஸ்லோஹத்தின் படி மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக்கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள ஊர் ஆகும். இதுவே கண்ணனின் பிறப்பிடமாகும்

இந்நகரம் யுகம்தொரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள். க்ருத யாகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான். த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக்கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான் என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.

ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா ......

என்று ,கொண்டாடப்படும் ஊர்  மதுரா நகரமாகும்.

பெரியாழ்வார், தனது திருமொழியில்

வடதிசை மதுரை சாளக்கிராமம்
வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய
எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத்
தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்
கண்டமென்னும் கடிநகரே.

ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்

அன்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.

நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்

மண்ணின் பாரம் நீக்குவதற்கு வடமதுரையில் கண்ணன் வந்து பிறந்தான், கண்ணன் அல்லால் மற்றொரு தெய்வம் இல்லை என்று உணருவீர், அவனைச் சரண் அடைந்து உய்ம்மின்
என்று, கூறு கிறார்.
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால் இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும், வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.
ஆதாரம்:
திவ்யதேச மாஹாத்ம்யம்--- தொகுத்தவர்; வேளுக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்ணன் ஸ்வாமிகள். மூன்றாம் பதிப்பு, கிஞ்சித்காரம் டிரஸ்ட், 6, பீமசேனா கார்டன் தெரு, மயிலாப்பூர், சென்னை-4.
கண்ணன் பிறந்த இடத்தையும் மற்றும் மதுராவில் கண்ணனுக்கு வேண்டிய இடங்களையும் காண்போம்.
                    க்ருஷ்ண ஜன்ம பூமி யின்  முகப்பு

1. ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி.
கம்சனின் அரண்மனையில் ஒருகாட்சி::
தேவகிக்கும் வசுதேவருக்கும் மாங்கல்யதாரணம் நடத்துவது என்று கம்சன் தீர்மானிக்கிறான். உரிய நாளில் திருமணம் செய்து அவர்களை ரதத்தில் ஏற்றி பாசத்துடன் வழியனுப்ப தயாராகிறான். அந்த சமயம், வானத்தில்
"கம்சா, தேவகிக்கும், வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் உனக்கு எமன்"
என்று அசரரி கேட்கிறது. கம்சன் திடுக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு வழியனுப்புவதை நிறுத்திவிட்டு,
"இவர்கள் இருவரையும் உடனே கொல்லுங்கள்"
என தனது ஆட்களுக்கு ஆணை இடுகிறான். அதிர்ச்சி அடைந்த வசுதேவர், கம்சனிடம்,
" கம்சா,எங்களுக்கு பிறக்கும் எட்டாவது மகன் தானே உனக்கு எமன். நாங்கள் என்ன பாவம் செய்தோம்.எங்களுக்கு பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்து விடுகிறோம். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். எங்களைக் கொன்று அந்தப் பாவத்தை வேறு நீ ஏன் பெறவேண்டும்", என்று பலவாறு அவனுக்கு அறிவுரை சொல்கிறார். ஒருவாறு சமாதானம் அடைந்த கம்சன்,
"இவர்கள் சொல்வதும் சரிதான். "இவர்களை சிறையிலடையுங்கள். இவர்களுக்கு தக்க பாதுகாப்புப் போடுங்கள்.இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்",
என்று தனது ஆட்களுக்கு ஆணையிடுகிறான்.
நாட்கள் சென்றன. தேவகியும் கருவுற்றாள்.குழந்தை பிறந்த செய்தி கேட்டு,கம்சனும் அந்தக் குழந்தையை உடன் பெற்று கொன்றான்.இது மாதிரி ஆறு குழ்ந்தைகளிக் கம்சன் தொடர்ச்சியாகக் கொன்றான். தேவகி ஏழாவது கர்ப்பம் தரித்தாள்.அந்த சமயத்த்தில் விஷ்ணு பகவான் தன் யோகமாயையை கூப்பிட்டு
"ரோகிணி கோகுலத்தில் வாழ்கிறாள். நீ தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை வெளியே இழுத்துக்கொண்டு போய் ரோஹினியின் கர்ப்பத்தில் வைத்து விடு. தேவகிக்கு கர்ப்பச் சிதைவு என்று கம்சனிடம் சொல்லிவிடுவார்கள்"
என்று ஆணையிடுகிறான். இந்தக் குழந்தைதான் பலராமன்.
"மேலும் நீ போய் கோகுலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் பெண் குழந்தையாக பிற.நான் தேவகியின் எட்டாவது மகனாக மதுரையில் பிறந்து, என்னை வசுதேவர் யமுனையைத் தாண்டி கோகுலத்தில் கொண்டு விட்டு, உன்னை எடுத்துக் கொண்டு வந்து கம்சனிடம் எட்டாவது குழந்தையாகக் கொடுப்பார்.உன்னைக் கம்சன் கொள்ள முற்படும்போது நீ நடந்ததைச் சொல்லி விட்டு மறைந்து விடு",
என்று ஆணை இடுகிறார்.
அந்தக் கண்ணன் அவதரித்த சிறைச்சாலை. இங்கேதான் வசுதேவரும்,தேவகியும்அடைக்கப்பட்டு இருந்தார்கள். இங்கு தான் எட்டாவது குழந்தையாக கண்ணன், தந்தையின் காலில் விலங்குகள் அவிழ, நான்கு தோள்களோட சகல ஆயுதங்களுடன்,ஆபரங்களுடன் பிறந்தான்.தனது ஜன்ம ரகசியத்தை பெற்றோர்களுக்கு வெளியிட்டு பின்னர் அதை மறக்கும்படி செய்தான்.எனவே வசுதேவர் கண்ணனைக் கொண்டுபோய் கோகுலத்தில் யசோதைக்கு அருகில் விட்டுவிட்டு அவளுக்கு பிறந்த பெண் குழந்தையை சிறைச்சாலைக்கு அடுத்துச் சென்றார்.
இவைகள் நடந்த இடம்தான் நாம் பார்க்கும் சிறைச்சாலை. புராதனமான கோயில் கண்ணனின் கொள்ளுப் பேரன் வஜ்ரனாபன் என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பல படை எடுப்புக்களால் தற்போது உள்ள நிலையில் உள்ளது. பக்கத்திலேயே முகமதியர்களின் மஸூதி உள்ளதால் பாதுகாப்பு அதிகம் உள்ளது.கைபேசி,காமிராக்களைக் கொண்டு போகவேண்டாம்.

2.கேசவ்சி மந்திர்:

ஜன்ம பூமிக்கு அருகில் உள்ளது.புராதனமான கோயில்.கம்சனின் சிறை முன்னொரு காலத்தில் இங்கு வரை இருந்ததாகச் சொல்வார்கள்.இங்குள்ள மூர்த்தியை 24 அலங்காரகளாலும் அலங்கரித்து உள்ளார்கள்.மேலும் தேவகியும் வசுதேவரும் வணங்கிய மூர்த்தியாகும்.

                                   போதரா குண்டம் 
3.போத்ரா குண்டம்:
ஜன்ம பூமிக்கு அருகில் மிக அழகான குளம்."பவித்ர குண்டம்" என்ற சொல் மருவி "போத்ரா குண்டம்" என்று அழைக்கப்படுகிறது. சிறைச்சாலையில் உள்ளபோது,வசுதேவரும்,தேவகியும் நீராடி துணி துவைப்பார்களாம்.
4.கம்சா டீலா ,ரங்கா பூமி:
அஞ்சலகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. இங்கு தான் கண்ணன் முஷ்டிக மற்றும் சாணுரர்களை சண்டை இட்ட இடம்.இங்கே இருந்த குன்றின்மேல் அமர்ந்து இருந்த கம்சனையும் கீழே தள்ளி கொன்றானாம்.

                                                    ஆதி  வராஹ முர்த்தி
5.ஆதிவராஹ மூர்த்தி:
முன்னொரு காலத்தில் மதுரா வராஹ ஷேத்திரமாக இருந்ததாம் அயோத்திலிருந்து சத்ருக்க்னனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
6.த்வாரகா தீசன் சந்நிதி:
த்வாரகா தீசன் சந்நிதி ,விஸ்ராம் காட், த்ருவ டீலா ஆகியவை யமுனை நதிக்ரைக்கு அருகாமையில் உள்ளன. எனவே வாகனத்தில் சென்று பார்ப்பவர்கள் வாகனத்தை பெங்கால் காட் அருகே நிறுத்தி வைத்துக் கொண்டு தரிசிப்பது நலம். த்வாரகா தீசன் சந்நிதி 150 ஆண்டுகளுக்கு முன்னர் வல்லபாசார்யா சம்பிரதாயத்தில் கட்டப்பட்டது. ருக்மிணி சத்யபாமா சமேத கணணன் எழுந்தருளி உள்ளான்.
                                          
                                                          விஸ்ராம் காட் மதுரா
7.விஸ்ராம் காட்:
கண்ணன் கம்சனை முடித்து அவனுடைய அந்திமகிரியைகளை "த்ருவ காட்டில்" செய்து விட்டு நீராடி ஓய்வேடுத்தான் என்பர்.இது 24 தீர்த்தங்களுள் முக்கியமானது ஆகும்.யமுனைக் கரையில் உள்ளது கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷத்விதீயை "யமத்விதீயை", அன்று இங்கு நீராடினால் சம்சாரத்தில் இருந்து ஒய்வு கிடைக்குமாம்.
8.த்ருவ டீலா:
யமுனையின் மற்றொரு கரையில் உள்ள இந்த இடத்தில் துருவன் தவம் செய்து பகவானைக் கண்டான்.பாதை சரியில்லாமல் உள்ளதால், இதனை விஸ்ராம் காட்டில் இருந்தே சேவித்துக் கொள்ளவேண்டும்.
                                                               தாள வனம்  மதுரா 
9.தாள வனம்:
மதுரைக்குத் தெற்கே 6 மைல் தொலைவில் உள்ளது.இங்கு பலராமன் கோயிலும் குண்டமும் உள்ளன. 10.மது வனம்: மதுரைக்கு தென்மேற்கே உள்ளது. இங்கு மது என்ற அசூரனைக் கொன்றதால் மதுவனம் எனப்பட்டது இதைத் தவிர இன்னும் பல இடங்கள் பாதை சரியில்லாமல் இருக்கின்றன.

https://www.cx.com/mycx/share/CDpB9gqmEeGgJBICOBubSA/krishna%20anubav%20yaathra.msdvd

இவைகளைப் பற்றிய விளக்கங்களை வேளுக்குடி ஸ்ரீ உ.வே. க்ருஷ்ணன் சுவாமிகளின் உரையில் கேட்கலாம். அந்த உரையின் ஒலி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக